Monday, June 27, 2016

அந்தரங்க வாசிப்பின் துணைக்கருவிகள்

பதாகை இதழில் வெளிவந்தது - (https://padhaakai.com/2016/06/19/ancillary-instruments/)
---
உணர்தல், உணர்வதை புரிந்து கொள்ள முயலுதல், பிறகு ஏன் அவ்வாறு உணர்ந்தோம்/ புரிந்து கொண்டோம் என இன்னும் உள்நோக்கி செல்லுதல் என்பது வாசகன் எந்தவொரு கலைப்படைப்பையும் உள்ளுணர்வும் தர்க்கமும் சார்ந்து அணுகும் முறையில் ஒன்றாக இருக்கலாம். வாசிப்பு முதன்மையாக, அந்தரங்கச் செயல்பாடாக மட்டுமே இருக்கக் கூடும். ஆனால் அவ்வாறு மட்டுமாக இருந்தால், வாசிப்பின் நாம் அறிந்திராத பல பாதைகளில் பயணம் செய்யும் வாய்ப்பே கிட்டாது. அதிலும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பான செவ்வியல் ஆக்கங்களை வாசிக்க -படைப்பு எழுதப்பட்டுள்ள மொழியில் மட்டுமின்றி சமூகத்திலும், விழுமியங்களிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் – இலக்கிய பதிப்புக்களின் துணை முக்கியத்துவம் பெறுகிறது.
ஷேக்ஸ்பியரின் 5வது சானட்டில் உள்ள
Beauty o’er-snowed and bareness every where:
Then were not summer’s distillation left,
A liquid prisoner pent in walls of glass,
Beauty’s effect with beauty were bereft,
Nor it, nor no remembrance what it was:
வரிகள். கண்ணாடிக் குவளையில் திரவத்தை ஊற்றி வைப்பது போல் அழகை பொத்தி வைத்து, அழகின் சாரத்தையேனும் அழியாமல் காப்பாற்ற முடியும் என்பதாக இவற்றை ஒரு பொது இலக்கிய வாசகன் புரிந்து கொள்ள முடியும். அதே நேரம் , ‘கைதி’ என்று சுட்டுவதன் நோக்கம் என்ன, அப்படிச் சிறைபிடித்தாவது அழகை பாதுகாக்க வேண்டுமா, அப்படி செய்வது அறம் சார்ந்ததா போன்ற கேள்விகளையும் அவன் எழுப்பக் கூடும்.
ஷேக்ஸ்பியரின் 19வது சானட்டின்
“Pluck the keen teeth from the fierce tiger’s jaws,
And burn the long-lived phoenix in her blood;”
வரிகளில் Phoenix பறவை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளதில் இருந்து (Phoenix பறவை குறைந்தபட்சம் 500 ஆண்டுகள் வாழ்ந்து மடிந்தபின் புத்துயிர் பெறுவதாக பொதுவான ஐதீகம் உள்ளது), காலம் அழகை எத்தனை முறை அழித்தாலும் அது மீண்டும் உயிர்கொள்ளும் என்று புரிந்து கொள்ளலாம்- ஷேக்ஸ்பியரின் புகழ் பெற்ற 18வது சானட்டில்
“Nor shall Death brag thou wander’st in his shade,
When in eternal lines to time thou grow’st;
So long as men can breathe or eyes can see,
So long lives this, and this gives life to thee. “
என்று சொல்லி இருப்பது போல் கவிஞனின் எழுத்தில் கிடைக்கும் இறவாமையால்- என்பதாக வாசகன் நேரடி வாசிப்பில் புரிந்து கொள்ள முடியும்.
ஷேக்ஸ்பியரின் சானட்கள் குறித்து பல கோணங்களில் விளக்கங்களை முன்வைக்கும் பதிப்புகள் பல வந்துள்ளன. அவற்றில் குறிப்பிடத்தக்கதாக சொல்லப்படும் ஒன்றான John Kerrigan பதிப்பில் மேலே பார்த்த 5ஆம் சானட்டின் வரிகளை அவர் இப்படி விளக்குகிறார்: ரோஜா நீர் கண்ணாடி குவளையில் இருப்பது என்பது திருமண பந்தத்தின் தூய்மையின் பாதுகாவலாக, அக்குவளை உடைவது அப்பந்தத்தை கெடுக்கும் ஒன்றின் உருவகமாக ஷேக்ஸ்பியருக்கு முன்னர் Arcadia என்ற நூலில் உபயோகிக்கப்பட்டது. இப்போது வாசகனுக்கு அந்த வரியின் இதுவரை தான் அறிந்திராத பொருள் தெரிய வருகிறது. மணவுறவு என்று இங்கு பொதுவாக குறிப்பிடப்பட்டாலும், அதில் ‘பெண்ணின்’ இடம், அவளிடம் எதிர்பார்க்கப்படும் ‘தூய்மை’ இவற்றையே ‘Arcadia’ சுட்டுகிறது என்றும் புரிந்து கொள்ள வாய்ப்புள்ளது. அத்துடன் அந்த உருவகத்தை ஷேக்ஸ்பியர் எப்படி மாற்றுகிறார் – திருமண பந்தத்தின் பாதுகாவல் என்ற அர்த்தத்தை மாற்றி, குவளை என்பது கருவறையை சுட்டுவதாக, அதாவது அழகின் எச்சமேனும், தலைமுறைகள் தோறும் வாரிசுகளால், வழித்தோன்றல்களால் காப்பாற்றப்பட்டு முன்னெடுத்துச் செல்லப்படுவதாக புரிந்து கொள்கிறான். இப்போது அவ்வரிகள் குறித்த இரு புதிய திறப்புக்கள் மட்டுமின்றி, பழமையை புத்தாக்கம் செய்யும் ஷேக்ஸ்பியரின் எழுத்தாளுமை பற்றிய புரிதலும் கிடைக்கக்கூடும்.
அதே போல் 19ஆம் சானட்டின் வரிகளையும் விரிவாசிப்பு செய்கிறார் Kerrigan. “in her blood” என்ற சொற்றொடர் “to be in blood” என்பதின் அதாவது “to be in one’s prime” என்று அர்த்தம் கொள்ளத்தக்க சொற்றொடரின் மருவல் என்று விளக்குகிறார். இப்போது இந்த வரிகளை, Phoenix பறவையை (அழகை) அழிக்க, காலம் 500 ஆண்டுகள் வரை காத்திருக்க தேவையில்லை, எப்போது வேண்டுமானாலும் அதை அழிக்க முடியும் என்ற பொருளில் வாசிக்க வாய்ப்புள்ளது. Phoenix (அல்லது அது இக்கவிதையில் சுட்ட வரும் அழகு) இப்போது காலத்தை வெல்லும் பறவை மட்டும் அல்ல. நாளை இந்த சானட்களின் பிரதிகள் அனைத்தும் அழிக்கப்பட்டால், இவற்றின் உந்து சக்தியான (muse) நாயகன்/ நாயகியை உலகம் காலப்போக்கில் மறந்து விடும். அதே நேரம், ஒரு சிலரிடம் மட்டும் வாய்மொழி பதிவுகளாக இவை காப்பாற்றப்பட்டு மீண்டும் காலத்தை மீறி, உலகின் முன் வலம் வர வாய்ப்புள்ளது. இப்போது இந்தக் கவிதை இறுதியான வெற்றியோ தோல்வியோ இல்லாத – இரு தரப்பும் சமநிலையில் இருக்கும் – களத்தின் சித்தரிப்பாக வாசகனுக்கு தோன்றக் கூடும். மேலும் 5வது சானட்டில் பார்த்தது போல் வாரிசுகளாலும் அழகு தொடர்ந்து உயிர் கொண்டிருக்கும் என்றும் இந்த இரு சானட்களையும் ஒப்பிட்டு ஒரு வாசிப்பை நிகழ்த்த முடியும்.
மொழி என்றில்லை, எழுதப்பட்ட சூழல் குறித்தும் பதிப்பு நூல்களில் இருந்து வாசகனுக்கு பல புதிய தகவல்கள் கிடைக்கின்றன. உதாரணமாக, ஷேக்ஸ்பியர் குறித்து எந்த வாசிப்பும் செய்திராத ஒருவரிடம் அவரின் சானட் தொகுதியைக் கொடுத்தால், அனைத்து சானட்களும் கவிஞனின் உத்வேகமாக (muse) இருந்த ஏதோ ஒரு பெண்ணை முன்னிறுத்தி எழுதப்பட்டவை என்றே முடிவுக்கு வருவார். எனவே, இந்தத் தொகுதியில் 126 சானட்கள் ஒரு இளைஞனை நோக்கி எழுதப்பட்டவை என்று பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்பது அவருக்கு ஆச்சரியத்தை தரக் கூடும். இந்தப் புரிதல் அவருடைய வாசிப்பில், அவர் முதலில் இந்தக் கவிதைகளில் உணர்ந்ததில் எந்த மாற்றங்களை ஏற்படுத்தக் கூடும் என்பது யோசிக்கத்தக்கது. ஷேக்ஸ்பியரை பாதித்த படைப்புக்கள்/ எழுத்தாளர்கள்,அவற்றின் தாக்கத்திலிருந்து சிறு கருவை எடுத்துக் கொண்டு முற்றிலும் தனித்தன்மை கொண்ட படைப்புக்களை அவர் உருவக்கிய விதம் குறித்து விளக்கும் பல கட்டுரைகள்/ நூல்கள் வந்துள்ளன. அவற்றைப் பற்றிய அறிதலும் அவரின் எழுத்தாளுமையை இன்னும் உள்வாங்க உதவக்கூடும்.
ஒரு கலைப்படைப்பை அதன் படைப்பாளி எந்த அர்த்தத்தில்/ கோணத்தில் உருவாக்கினான் என்பது குறித்தோ அதிலிருந்து தான் மிகவும் விலகிச் செல்வதைப் பற்றியோ கவலை கொள்ளாமல் அதை உள்வாங்குவதை முற்றிலும் தனக்கான ஒன்றாக மட்டுமே வாசகன் அணுகக் கூடும். செவ்வியல் படைப்புக்களைப் பொருத்தவரை, ஒரு படைப்பிற்கே பல பதிப்பாசிரியர்கள்/ தொகுப்பாசிரியர்கள் உள்ளார்கள். அவரவர்களின் அழகியல், கருத்தியல் கோட்பாடு சார்ந்து பல்வகைப்பட்ட பார்வைகளை அவர்கள் முன்வைக்கிறார்கள். இவற்றோடு சேர்த்து செவ்வியல் ஆக்கங்களை படிக்கும்போது, தன் வாசிப்பின் சுயத்தை கொஞ்சமேனும் விட்டுக் கொடுக்காமல் பன்முக வாசிப்பை உள்வாங்குவது சாத்தியம் அல்ல. அப்படி விட்டுக் கொடுக்கும்போது பல புதிய உலகங்கள் அவன் முன் தோன்றுகின்றன, அவற்றினுள் செல்ல தான் உருவாக்கிய உலகை விட்டு அவன் தற்காலிகமாகவேனும் நீங்க வேண்டியுள்ளது. அதே நேரம் தன் அழகியல் மற்றும் உணர்வுத்திறம் குறித்த தாழ்வு மனப்பான்மையை அவன் கொள்ள வேண்டியதில்லை. தன் நிலையில் உறுதியாக இருந்தவாறே மற்ற கோணங்களின் சாத்தியங்களை ஏற்றுக்கொள்வதும், சில நேரங்களின் தன் முந்தையை நிலைபாட்டை மாற்றிகொள்வதும் கூட அவன் வாசிப்பு ஆளுமையையை இன்னும் மெருகேற்றவே செய்யும்.
பின்குறிப்பு:
பெங்குவின் வெளியீடாக வந்துள்ள ‘The Sonnets and A Lover’s Complaint’ (John Kerrigan)நூலில் இருந்து இந்த இரு சானட்களுக்கான விளக்கங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

Tuesday, May 10, 2016

லிடியா டேவிஸ் (Lydia Davis) குறுங்கதைகள் – ஒரு விரிபார்வை

பதாகை இதழில் வெளிவந்தது - (https://padhaakai.com/2016/05/02/lydia-davis-2/)
-----------
We are sitting here together, my digestion and I. I am reading a book and it is working away at the lunch I ate a little while ago.
Companion‘ என்ற தலைப்பிலான லிடியா டேவிஸின் (Lydia Davis) ‘குறுங்கதை’ இது. கதையா, நாட்குறிப்பா என்பதெல்லாம் ஒருபுறம் இருக்க, இதில் நாம் என்ன வாசிக்க முடிகிறது?. கதைசொல்லியும் அவருடைய செரிமானமும் ஒருவருக்கொருவர் துணை என்று Companion என்ற தலைப்பை வைத்து புரிந்து கொள்வதோடு, புத்தகமும், கதைசொல்லியும் ஒரு இணை, வாசிப்பும் செரிமானமும் மற்றொரு இணை என்றும் வாசிக்கலாம். வெளிப்படையாகச் சுட்டப்படாவிட்டாலும், ‘working away at the lunch’ என்பதை, உண்டதை வெளிக் கொணரும் குமட்டல் நிறைந்த எழுத்தை கதைசொல்லி வாசிக்கிறார் என்ற பிழைவாசிப்பையும் நாம் நிகழ்த்தக்கூடும். செவிக்குணவில்லாதபோது மட்டுமே வயிற்றுக்கு ஈவதை டேவிஸ் கொஞ்சம் மாற்றுகிறார் என்றும் இது குறித்து பேசிப் பார்க்கலாம் இல்லையா? .
Away from Home (தலைப்பு)
It has been so long since she used a metaphor!
இந்த நொடிக்கதையின் ஒரே வரியான ‘உருவகத்தை அவள் உபயோகித்து பல காலமாகி விட்டது’ என்பதை தலைப்போடு பொருத்தி வாசிப்போமே. எழுத்தாளனுக்கு உருவகங்கள் மிக நெருக்கமானவை என்பதால், அதை அவள் உபயோகிக்காமல் இருந்துள்ளது, தன் தாய் (தன் சொந்த) வீட்டிலிருந்து/ நாட்டிலிருந்து மிகவும் விலகிப் போய்விட்ட உணர்வை அவளுக்குத் தந்திருக்கக்கூடும் என்ற வாசிப்பை நிகழ்த்தலாம். தலைப்பில் உள்ள ‘Home’ ஐ உருவகமாக வைத்துப் பார்த்தால், Away from Home போன்ற உருவகம் கொண்ட தொடரைப் பல காலம் கழித்து இப்போதுதான் எழுதி இருக்கிறார் என்றும் தலைகீழாக வாசிக்கக்கூடுமா?
Spring Spleen (தலைப்பு)
I am happy the leaves are growing large so quickly.
Soon they will hide the neighbor and her screaming child.
அண்டை வீட்டார் தன் கண்களில் படமாட்டார்கள் என வசந்த – இனிமையின் – காலத்தின், நாம் எண்ணிப் பார்த்திராத நன்மையை டேவிஸ் முன்வைக்கிறார். அதில் ‘screaming’ என்ற பெயர் உரிச்சொல்லின் (adjective) தேவை என்ன? அண்டை வீட்டுப் பெண்ணும் அவள் குழந்தையும் கண்ணில் பட மாட்டார்கள் என்று சொல்லிவிட்டு போயிருக்கலாமே? இலைகள் உருவத்தை மறைத்தாலும், சத்தத்தை மறைக்கக்கூடுமா, அந்தளவிற்கு அடர்த்தியாக செடிகள், பல குடும்பங்கள் வசிக்கும் இடத்தில் வளர்ந்திருக்குமா என்று கேட்டு இந்த குறுங்கதையை புரிந்து கொள்ள முயற்சிக்கலாம். குழந்தையின் அலறல் எப்படியும் கேட்கப் போவதால், தான் இப்போது உணரும் மகிழ்ச்சி தற்காலிகமானது, அரைகுறையானது என்பதை கதைசொல்லி புரிந்துகொண்டிருக்கிறார் என்பதை சுட்ட ‘screaming’ஐ பயன்படுத்தி இருக்கிறாரா?
Examples of Remember (தலைப்பு)
Remember that thou art but dust.
I shall try to bear it in mind.
(Italics as in print edition)
முதல் வரியில் உள்ள அறிவுரைக்கான, (அரைமனதான?) ஒப்புதலாக இரண்டாவது வரி உள்ளது. இது ஒரு வாசிப்பு. இரண்டு வரிகளையும் தலைப்போடு பொருத்திப் பார்த்தால், அவை தனித்தனியே கூட அர்த்தம் கொள்கின்றன, அதாவது தலைப்பில் உள்ள ‘Examples’ இந்த இரண்டு வரிகள். சில வார்த்தைகள் ‘Italics’ல் குறிப்பிடப்பட்டுள்ளது அவசியமான ஒன்றா அல்லது சொல்ல வருவதை வாசகனுக்கு திணிக்கும் முயற்சியா என்றும் வாசகன் கேள்வி எழுப்பக்கூடும். எப்படி இருப்பினும் நம் வாசிப்பை ‘Italics’ எப்படி பாதிக்கின்றன போன்ற கேள்விகளையும் இங்கு எழுப்பலாம்.
Insomnia (தலைப்பு)
My body aches so-
It must be this heavy bed pressing up against me
தூக்கம் வராத ஒருவர் அதற்கான காரணமாக, படுக்கையைச் சுட்டுகிறார் – அவருக்கு வேறேதும் உடல்/ மனரீதியான காரணங்களும் இருக்கலாம், ஆனால் வசதியாக படுக்கை மீது பழி போடுகிறார் – என்பது இந்தக் கதையின் முதல் வாசிப்பாக இருக்கக்கூடும். ‘against me’ என்று சொல்லப்படும்போது, படுக்கை எப்படி ஒருவர் மீது அழுத்த முடியும், கரடுமுரடான படுக்கை என்றாலும், படுப்பவர்தானே அதன் மேல் அழுந்தி இருக்கிறார் என்று ஒரு கேள்வியை எழுப்பலாம். அப்போது உடல் வலி என்று வருந்துவது, அவ்வலியால் தூங்க இயலாமல் துன்புறுவது படுக்கை நிலை கொண்டிருக்கும் தரை போலிருக்குமோ? அப்போது, மண்ணின் சுமையே தன்னை அழுத்துவதாக வாசிக்கலாம்.
The Busy Road (தலைப்பு)
I am so used to it by now
that when the traffic falls silent,
I think a storm is coming.
வரிகள் மடக்கி எழுதப்பட்டு இருப்பதால் மட்டுமல்ல, இது உருவாக்கும் துல்லியமான பிம்பமும், அதில் பொதிந்துள்ள உணர்வும் கவித்துவ கணத்தை நினைவுபடுத்தக்கூடும். ‘so used to it’ என்று நம்பிக்கையோடு ஆரம்பிக்கும் கதைசொல்லி ஏன் ‘think’ என்று தயக்கத்துடன் /சந்தேகத்துடன் முடிக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் போக்குவரத்து அமைதியாகும்போது, புயல் வரப்போகிறது என்று நினைத்து அது பொய்த்து விடுகிறது என்பதாக இந்த சந்தேகத்தைப் புரிந்து கொள்ளலாமா? அல்லது இரைச்சலுக்குப் பழகிய செவிகளை மௌனம் அச்சுறுத்துகிறது என்றோ, மக்கள் திரளுக்கு நடுவே வாழ்ந்து பழகியவர்கள் தனிமையை அஞ்சுகிறார்கள் என்று புரிந்து கொள்ளலாமா?
இன்னொரு கவிதையையொத்த குறுங்கதை.
Head, Heart (தலைப்பு)
Heart weeps.
Head tries to help heart.
Head tells heart how it is, again:
You will lose the ones you love. The will all go. But
even the earth will go, someday.
Heart feels better, then.
But the words of head do not remain long in the ears of
heart.
Heart is so new to this.
I want them back, says heart.
Head is all heart has.
Help, head. Help heart.
எல்லாருக்கும் தெரிந்த கதைதான். மூளை சொல்வதை மனம் கேட்பதில்லை, அப்படியே கேட்டாலும் அது நீடிப்பதில்லை. மனக் குரங்கு மீண்டும் வெளியே உலவ ஆரம்பித்து விடுகிறது. ‘Heart is so new to this’ என்பதின் அர்த்தம் என்னவாக இருக்கும். மனம் தன்னை புதுப்பித்துக் கொண்டே இருப்பதால், புதிய புதிய வருத்தங்கள் அதற்குள் தோன்றுகின்றன அல்லது பழைய வருத்தங்கள் மீண்டெழுகின்றன. எனவே ஒவ்வொரு முறையும் மனம் துயர் கொள்ள, அதை மீண்டும் மூளை தணிக்க என இது தொடர்கதையாக நீள்கிறது. எனில் இங்கு யார் ‘Sisyphus’, தொடர்ந்து துயருறும் மனமா அல்லது துயரைத் துடைத்து சில காலத்திலேயே மீண்டும் அதே துயர் துடைத்தலில் ஈடுபடும் மூளையா?
டேவிஸ் அதிகமும் குறுங்கதைகள்/ நிமிடக்கதைகள் மட்டுமே எழுதி இருக்கிறார், அதிலும் சொல்/ மொழி விளையாட்டை மட்டுமே நிகழ்த்தியுள்ளார் என்று அவர் எழுத்தைக் குறித்த பிழைத்தோற்றத்தை இந்தக் கட்டுரை தரக் கூடும் .Lonely என்ற “No one is calling me. I can’t check the answering machine because I have been here all this time. If I go out, someone may call while I’m out. Then I can check the answering machine when I come back in,” குறுங்கதையில் அவர் தனிமையை மட்டுமல்ல, அதை தவிர்க்க எதைப் பற்றிக்கொள்வது என்ற மனதின் வேட்கை இட்டுச் செல்லும் உளச் சிக்கலையும் சித்தரிக்கிறார். ‘A Strange Impulse’ என்ற ஒரே ஒரு பத்தி அளவு கதையில் வெய்யில் காயும் பரபரப்பான கடை வீதியில், திடீரென கடை முதலாளிகள் காதைப் பொத்திக் கொள்கிறார்கள், வீதியில் உள்ள மற்றவர்கள் அடித்துப் பிடித்து ஓட ஆரம்பிக்கிறார்கள். விரைவில் முடிவுக்கு வரும் இந்த பித்து நிலை அன்றாட வாழ்வின் எரிச்சலுக்கான வடிகாலாக சுட்டப்படுகிறது.
இல்வாழ்கை, நட்பு, உள்முகப் பரிசோதனை , தனிமை என வாழ்வின் பல பரிணாமங்களை தன் எழுத்தின் மூலம் வெளிக்கொணரும் டேவிஸ், சிறுகதையின் வழமையான அளவிலும் சரி, குறுநாவலின் அளவிலும் சரி கதைகள் எழுதியுள்ளார். புனைவின் தெளிவான அம்சங்கள் கொண்டவை , புனைவும் நிஜமும் இணைபவை என சொல்லத்தக்கவை, கவிதை வடிவுக்கு நெருக்கமானவை, ‘What you learn about the Baby’ போன்ற வகைப்படுத்த முடியாதவை என பல்வேறு நடை, தொனி கொண்ட கதைகள் அவர் புனைவுலகில் உள்ளன. குறுங்கதைகள் அவர் புனைவுலகின் குறிப்பிடத்தக்க, ஆனால் அதை பிரதிநிதப்படுத்தும், ஒரே அம்சம் கிடையாது. கவிதை/ புனைவு/ அ-புனைவு என அனைத்தின் வரையறைகளையும் ஒன்றுடன் ஒன்று முயங்கச் செய்து கலைத்துப் போடும் டேவிஸின் எழுத்தை வகைப்படுத்த முயல்வது என்பது வியர்த்தமாகவே முடியும்.

இந்தக் கட்டுரையின் நோக்கம் டேவிஸின் புனைவுலகைப் பற்றிய ஆழமான குறுவெட்டு பார்வையை தருவதோ , அவரது எழுத்தின் கச்சாப் பொருட்கள், கேன்வாஸ், நுட்பங்கள் பற்றியோ பேசுவது அல்ல, தன் குறுங்கதைகள் மூலம் வாசிப்பை அவர் எவ்வாறு வாசகனை அவன் அறிந்திராத பாதைகளில் பயணிக்கச் செய்கிறார் என்பதை மட்டும் பார்ப்பதே. தங்களின் அளவைச் சார்ந்து குறுங்கதைகள் இயல்பாகவே அதற்கு தோதாக உள்ளன. அவை ஒரு சிறிய, பூட்டிய கதவை வாசகன் முன் வைக்கின்றன. அதை திறந்து உள்நுழைபவன் வானமே கூரையாய், வெளியே நாற்புற சுவராய் இருக்கும் முடிவில்லா -உலா வர வழிகளற்ற பாதைகள் கொண்ட – வீட்டினை காண்கிறான். அதனுள் அவன் தேர்ந்தெடுத்து செல்லக் கூடிய பாதைகளும், திசை தப்பிய அலைதலும் – அதற்கிணையான இந்தக் கட்டுரையிலேயே இருக்கும் பிழைவாசிப்பின் சாத்தியங்களும் – மட்டுமே இந்தக் கட்டுரையில் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.